பிழைப்பவரின் பேருழைப்பை முடிந்த மட்டும்
பிழிகின்ற கொடுமைக்குப் பெயர்சு ரண்டல்
உழைப்பவரின் குருதியினை உறிஞ்சு கின்றோர்
உலகினிலே கொழுக்கின்ற சுரண்டல் காரர்
தழைக்கின்ற வளமனைத்தும் உழைக்கா தார்க்கா?
தாழ்வுறுத்தும் வளமையெல்லாம் உழைப்போ ருக்கா?
உழைக்கின்ற மக்களெல்லாம் சிந்திக் கின்ற
உழைப்பேறகாக்காரணத்தால் தொடரும் துன்பம்.
விளம்பரத்தின் பகட்டாலே கண்ணா டிக்கல்
வைரமெனல் வணிகத்தில் சுரண்டல்! சற்றும்
நலப்பணியில் நோக்கமிலார் தொடங்கும் தொண்டு
நனிமிக்க ஏமாற்றுச் சுரண்டல் இன்றும்
துலக்கமிலாப் பழங்கதையும் தொன்மக் கூற்றும்
சொல்லுகின்ற அருள்வாக்கும் பலியும் நாளும்
விளங்காத மனுதரும வெட்கக் கேடும்
உண்மையில்நம் "அறிவேய்க்கும் பெருஞ்சு ரண்டல்"
அன்புணர்வு மாந்தநேயம் என்னும் சொற்கள்
அவற்றின்நற் பொருளிழந்த அலங்கோ லத்தால்
முன்பிருந்த நல்லிணக்கம் அமைதி வாழ்க்கை
முற்றிலுமாய் இன்றைக்கு எங்கும் இல்லை!
நின்றெண்ணிப் பார்த்திடவே ஒருவ ருக்கும்
நேரமில்லை, காலமில்லை! விரைவு, ஓட்டம்!
வென்றுயர வேண்டுமெனும் வேகப் போக்கில்
வீழ்த்துவதோ நல்லுணர்வைச் சிந்திப் பீரே!
Thursday, May 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment